ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் சில வாரங்களில் இந்திய சந்தையில் தனது வியாபாரத்தைத் துவக்க இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைத்து வருவதாகக் கூறப்படுகின்றன.
அதன் படி ஐடியா நிறுவனம் தனது டேட்டா சேவையில் சுமார் 45 சதவீதம் அதிகரித்துப் கூடுதல் டேட்டா வழங்க இருப்பதாக அறிவித்தது. அதன் படி ரூ.8 முதல் ரூ.225 வரையிலான டேட்டா பேக் கட்டணங்களில் முன்பை விட டேட்டா அதிகமாக வழங்குவதாக அறிவித்தது. கடந்த வாரம் இதற்கான அறிவிப்பினை ஐடியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தனது சேவைகளுக்கு ஏற்ப டேட்டா அளவினை சுமார் 67 சதவீதம் அதிகரிப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. இதன் மூலம் ஏர்டெல் டேட்டா சேவைகளில் பழைய கட்டணங்களுக்கு முன்பை விடக் கூடுதல் டேட்டா பெற முடியும்.
தற்சமயம் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பழைய விலைக்குக் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்த நிலையில் டெலிகாம் சந்தையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களும் இதே போன்ற சலுகையை வரும் நாட்களில் அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடாஃபோன் சில நாட்களில் கூடுதல் டேட்டா வழங்கும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பல்வேறு நிறுவனங்களும் தங்களது இண்டர்நெட் பேக் கட்டணங்களை மாற்றியமைக்க முக்கியக் காரணமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கின்றது. இந்நிறுவனம் தனது 4ஜி சேவையைச் சந்தையிலேயே குறைந்த விலையில் வழங்க இருப்பதால் மற்ற நிறுவனங்கள் ஜியோவுடனான போட்டியைச் சமாளிக்கும் நோக்கில் அதிரடி விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளன எனச் சந்தை வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
ரிலையன்ஸ் ஜியோ பிரீவியூ 4ஜி சோதனையில் சுமார் 15,00,000 வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 26 ஜிபி வரை 4ஜி டேட்டா பயன்படுத்துவதாக ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ வரவு மூலம் டெலிகாம் சந்தையில் இண்டர்நெட் டேட்டா பேக் கட்டணங்கள் சுமார் 15-20 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.




0 on: "வரிசையாய் குறையும் மொபைல் இண்டர்நெட் விலை : அலற வைக்கும் உண்மை பின்னணி.??"